பிளாஸ்டிக் குப்பை

மனிதர்களால் தூக்கியெறியப்படும் குப்பைகள் தான் கடல் குப்பைகளில் பிரதானமானவையாய் இருக்கின்றன. இவை கடலில் மிதக்கின்றன அல்லது அடித்து செல்லப்படுகின்றன. இந்த கடல் குப்பைகளில் எண்பது சதவீதம் பிளாஸ்டிக் குப்பைகளாகும். இவை இரண்டாம் உலகப் போர் முடிந்த காலத்தில் இருந்து துரிதமாய் பெருகி வருகின்றன. கடல்களில் இருக்கும் பிளாஸ்டிக்கின் அளவு நூறு மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு அதிகமாய் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பைகளும், பிளாஸ்டிக் கழிவின் மற்ற வடிவங்களும் கடலில் வந்து கலந்து கடல் உயிரினங்களுக்கும் மீன் வளத்திற்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன.வாழ்விடம் இன்மை, பிராண வாயு பற்றாக்குறை மற்றும் உள்ளருந்தும் உணவு ஆகிய பிரச்சினைகள் காரணமாக நீர்வாழ் உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன. பொதுவாக பிளாஸ்டிக்கால் செய்யப்படுகிற மீன் வலைகளை மீனவர்கள் கடலில் விட்டுச் சென்று விடுகின்றனர் அல்லது தொலைத்து விடுகின்றனர். பேய் வலைகள் என்று அறியப்படும் இவற்றுக்குள் மீன்கள், டால்பின்கள், கடல் ஆமைகள், சுறாக்கள், கடல்பசுக்கள், முதலைகள், கடல்பறவைகள், நண்டுகள் மற்றும் மற்ற உயிரினங்கள் மாட்டிக் கொண்டு விடுகின்றன. இதில் அந்த உயிரினங்களின் இயல்பான இயக்கம் பாதிக்கப்பட்டு அவை பட்டினியாலும் தொற்றுகளாலும் அவதியுறுகின்றன. சுவாசிக்க மேற்பரப்புக்கு வர வேண்டிய அவசியத்தில் இருக்கும் உயிரினங்கள் மூச்சுத் திணறுகின்றன.
பல சமயங்களில் மிதக்கும் பொருட்களை தங்களது உணவாகக் கருதி பல உயிரினங்கள் உண்டு விடுகின்றன. இவ்வாறு செல்லக் கூடிய பிளாஸ்டிக் குப்பைகள் வெளியேற வழியின்றி இந்த விலங்குகளின் சீரணக் குழாய்களுக்குள் நிரந்தரமாகத் தங்கி விடலாம். இயல்பாக உணவருந்த முடியாத நிலையில் பசியாலோ தொற்றாலோ அந்த விலங்குகள் உயிரிழக்கக் கூடும்.
பிளாஸ்டிக் பொருட்கள் மற்ற பொருட்களை போல் உயிரியல் சிதைவுறுவதில்லை என்பதால் அவை குவிந்து கொண்டே செல்கின்றன. சூரிய வெப்பத்தில் அவை ஒளிச்சிதைவுறலாம், ஆனால் உலர்ந்த சூழ்நிலையில் மட்டுமே அவ்வாறு நிகழ முடியும். நீர் இந்த நிகழ்முறையைத் தடுத்து விடுகிறது. நீடித்து தங்கி விடக் கூடிய இவற்றில் பலவும் கடல் ஆமைகள், மற்றும் கருங்கால் ஆல்பட்ராஸ் ஆகிய கடல்வாழ் பறவைகள் மற்றும் விலங்குகளின்வயிற்றுக்குள் சென்று விடும்
கடல் சுழல்களின் மையத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் திரள்கின்றன. ஹவாய் தீவுகள் குப்பைகளில் பெருமளவை எதிர்கொள்கிறது. தொன்னூறு சதவீதம் பிளாஸ்டிக் கொண்ட இந்த குப்பை மிட்வே கடற்கரையோரங்களில் திரண்டு தீவின் பறவைகளுக்கு பெரும் அபாயமாக மாறியுள்ளது. லேசன் அல்பட்ராஸ் பறவைகளின் உலக எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு (1.5 மில்லியன்) மிட்வே அடோல் பகுதியில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.[61] இந்த அல்பட்ராஸ் பறவைகளில் அநேகமாக எல்லாவற்றின் சீரண அமைப்பிலுமே பிளாஸ்டிக் கலந்து விட்டது. இவற்றின் மூன்றில் ஒரு கரு இறந்து போகிறது.
பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நச்சு சேர்க்கைகளில் தண்ணீர் படும்போது அவற்றின் சுற்றுப்புறங்களும் மாசுபடக் கூடும். நீரிலிருக்கும் மாசுபாடுகள் சேகரமாகி பிளாஸ்டிக் குப்பைகளின்மேற்பரப்பில் படிகின்றன. இதனால் பிளாஸ்டிக் பொருட்கள் நிலத்தில் இருப்பதை விடவும் கடலில் இன்னும் அபாயம் விளைவிப்பதாய் ஆகி விடுகின்றனஇந்த நீர்வழி மாசுபாடுகள் கொழுப்பு திசுக்களில் உயிரியல் ரீதியாய் பெருகும் குணம் கொண்டவை. அத்துடன் உணவுச் சங்கிலியை உயிரியல் அளவுப்பெருக்கமுறச் செய்து தலைமை வேட்டைவிலங்குகளுக்கு நெருக்குதல் அளிக்கும். சில பிளாஸ்டிக் சேர்க்கைகள் உட்சுரப்பு அமைப்பை பாதிக்கும் தன்மை கொண்டவை. இன்னும் சில நோயெதிர்ப்பு அமைப்பை பாதிக்கலாம் அல்லது இனப்பெருக்க விகிதங்களைக் குறைக்கலாம். கடல்நீரில் இருக்கக் கூடிய மற்ற கரிம மாசுபாடுகளையும் மிதவைக் குப்பைகள் உறிஞ்சிக் கொள்ளக் கூடும். நச்சு விளைவுகள் தவிர,உட்செலுத்தப்படும்போது இவற்றில் சிலவற்றை விலங்கின் மூளை பெண்சுரப்பாக தவறாகக் கருதி விடும். இதனால் பாதிக்கப்பட்ட விலங்கினத்திற்கு ஹார்மோன் பாதிப்புகள் ஏற்படும்.
(நன்றி : விக்கிப்பீடியா)