அஞ்சாதே!
கவுன்சலிங் என்பது என்ன?
மாணவர்கள் விருப்பப்பட்ட பாடப்பிரிவை, விரும்பும் கல்லூரிகள் தேர்ந்தெடுக்க வகை செய்வதே கவுன்சலிங்.
கவுன்சலிங் எப்படி நடக்கிறது?
• கவுன்சலிங்குக்கு அழைக்கப்பட்ட மாணவர்கள் தங்களுக்கென்று குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்பாக ரொக்கம் அல்லது வரைவோலையாக (டி.டி) கவுன்சலிங் கட்டணம் கட்ட வேண்டும். பல்கலைக்கழக வளாகத்திலேயே வங்கி இருப்பதால் டி.டி. எடுப்பது சுலபம். ஆனால் நீண்ட வரிசை நிற்கும். எனவே ஊரிலிருந்து கிளம்புவதற்கு முன்பாகவே டி.டி. எடுத்து வந்துவிடுவது நல்லது.
• பணம் கட்டிய வரிசையே உங்களை ஒரு கூடத்துக்கு அழைத்துச் செல்லும். கட்-ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களை பிரிவு பிரிவாக பிரித்து வைத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட பிரிவு மாணவர்களை கவுன்சலிங்குக்கு ஒலிபெருக்கியில் அழைப்பார்கள்.
• மிகப்பெரிய அரங்கம் ஒன்றில் கவுன்சலிங் நடைபெறும். உள்ளே மாணவரோடு, பெற்றோரில் ஒருவர் மட்டுமே உடன் செல்லலாம். கவுன்சலிங் கூடத்தில் நுழைந்ததும், உங்கள் வருகையைப் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பதிவு மற்றும் கவுன்சலிங் முடியும் வரை உள்ளே நுழைந்தவர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதியில்லை.
• மிகப்பெரிய திரையில் காட்டப்படும் காலியிடங்களில் மூன்று பாடப்பிரிவுகள் மற்றும் மூன்று கல்லூரிகளை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். கலந்தாய்வின் போது மாணவர்கள் தெரிவு செய்த பாடப்பிரிவு மற்றும் கல்லூரி எக்காரணம் கொண்டும் மாற்றப்பட இயலாதது என்பதை மனதில் வைத்துக் கொண்டு தேர்வு செய்ய வேண்டும். தேர்ந்தெடுத்த பின்பு சான்றிதழ் சரிபார்க்கும் இடத்துக்கு செல்ல வேண்டும்.
• சான்றிதழ் சரிபார்க்கும் இடத்தில் உண்மையான சான்றிதழைக் காட்ட வேண்டும். ஜெராக்ஸ் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
• இறுதியாக நீங்கள் ஏற்கனவே தேர்வு செய்திருந்த கல்லூரி பாடப்பிரிவுகளில் ஒன்றை, கணினியின் முன் அமர்ந்திருக்கும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.
• கல்லூரி மற்றும் பாடப்பிரிவு ஒதுக்கப்பட்டு நீங்கள் அழைக்கப்படுவீர்கள். அங்கே நீங்கள் தேர்ந்தெடுத்த கல்லூரிக்கான ஒதுக்கீட்டுப் படிவமும், மீதம் செலுத்த வேண்டியத் தொகைக்கான வங்கிப் படிவமும் வழங்கப்படும். பணத்தை அன்றே செலுத்தலாம். அல்லது கல்லூரிக்குச் சென்றும் செலுத்தலாம்.
• ஒரு சிறிய மருத்துவப் பரிசோதனையும் நடைபெறும்.
கவுன்சலிங்கில் வெற்றி பெற...
சில முன் தயாரிப்புகளோடு போனால் – அதாவது ஹோம்வொர்க் செய்தால் – கவுன்சலிங் மூலம் நல்ல பலனைப் பெறலாம்.
1. என்ன படிப்பு, எந்த கல்லூரியில் என்பதை முன்கூட்டியே எந்தவித குழப்பங்களுக்கும் இடம் தராமல் தீர்மானித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய திறமை, ஆர்வம், மனோபாவம், சக்தி ஆகியவற்றின் அடிப்படையில் உங்கள் படிப்பினைத் தேர்ந்தெடுங்கள். எல்லோரும் என்ன படிக்கிறார்களோ அதையே நாமும் படிப்போம் என்றோ அல்லது வெறும் வேலை வாய்ப்பு அடிப்படையில் மட்டுமோ என்றோ தேர்ந்தெடுக்காதீர்கள். நான்கு வருடத்தில் வேலைச்சந்தை எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.
2. கல்லூரியை தெரிவு செய்வதற்கு முன்பாக அக்கல்லூரியில் அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள், தொழிற்துறையோடு அக்கல்லூரி வைத்திருக்கும் உறவு, வேலைவாய்ப்புக்கான ஏற்பாடுகள் இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://www.annauniv.edu/ இணையத்தளத்தில் இவ்விவரங்களை விலாவரியாக காணலாம். உதாரணத்துக்கு, நீங்கள் படிக்க விரும்பும் துறையில் கடந்த செமஸ்டரில் எத்தனை பேர் வெற்றி கண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள். அந்தத் துறையில் அக்கல்லூரி எப்படி என்பதை ஓரளவுக்கு புரிந்துக் கொள்ளலாம். உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கல்லூரியிலேயே படிக்க வேண்டும் என்று விரும்பினால், அங்கே உள்ள படிப்புகளில் எது சிறந்தது என்பதை கண்டுபிடியுங்கள்.
3. நீங்கள் விரும்பும் படிப்பு அல்லது கல்லூரி கண்டிப்பாக கிடைக்கும் என்று சொல்லமுடியாது. அதனால் உங்களது இரண்டாவது, மூன்றாவது விருப்பங்களை முன்னதாகவே தெரிவுசெய்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ரேங்க், கட்-ஆஃப், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் உங்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை உத்தேசமாக கண்டறிய முடியும். கடந்த ஆண்டின் ரேங்க் லிஸ்ட் கட்-ஆஃப் பட்டியலைக் கொண்டு ஒரு ஐடியா கிடைக்கும். ஆனால் இது 100 சதவிகிதம் துல்லியமாக இருக்குமென்று சொல்ல முடியாது. வருடத்திற்கேற்ப சிலபல காரணிகளால் மாறக்கூடும். இதைக் கண்டுபிடிக்க சில இணையத்தளங்கள் உதவும். உதாரணம் : http://collegesintamilnadu.com/Counseling/TNEA_Cutoff_Search.asp. உங்கள் மொத்த மதிப்பெண், விரும்பும் படிப்பு, இடஒதுக்கீட்டிற்கு தகுதியானவரா என்ற விபரங்களைக் கொடுத்தால் இந்த இணையதளங்கள் எந்தெந்தக் கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு உண்டு என்பதைச் சொல்லும். ஆனால் இதெல்லாம் உத்தேசமாக ஒரு ‘ஐடியா’வுக்குதான்.
4. கவுன்சலிங் தொடங்கிய பின்பு ஒவ்வொரு நாள் இரவும் http://www.annauniv.edu/tnea என்ற இணையத் தளத்தில் எந்தக் கல்லூரியில், எந்தப் பிரிவில் எவ்வளவு இடம் நிரம்பியிருக்கிறது போன்ற தகவல்களை உடனுக்குடன் ஏற்றி வைப்பார்கள். இதைத் தொடர்ந்துக் கவனித்து வந்தாலே, உங்கள் முறை வரும்போது என்ன நிலை இருக்கும் என்பதை ஓரளவு யூகித்து தெரிந்துக் கொள்ளலாம்.
இத்தனைக்குப் பிறகும் நீங்கள் விரும்பியது கிடைக்கவில்லை எனில்? சிம்பிள். கிடைத்ததை விரும்ப ஆரம்பியுங்கள்!
(நன்றி : புதிய தலைமுறை)